புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் 3 நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டம் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய மசோதாக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் 2023 நாரி சக்தி வந்தன் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த மசோதா குறித்து அவையில் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடி, இந்த விவகாரம் தொடர்பாக உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும், அதற்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நாட்டின் வரலாற்றில் சில முக்கிய தருணங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை சமூக மனநிலை மற்றும் தலைமைத்துவ திறன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தியுள்ளதாகவும், இந்திய ஜனநாயக வரலாற்றில் இது ஒரு வலுவான மரபை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை குறிப்பிட்டு, தேச கட்டமைப்பில் நாட்டின் 50 சதவீத மக்களும் பங்கேற்கும் முக்கிய தருணம் இதுவாகும் என அவர் தெரிவித்தார். மேலும், இந்த மசோதா நாட்டின் எந்த பகுதியிலும் உள்ளவர்களுக்கும் தீங்கு விளைவிக்காது என உறுதி அளித்தார்.
பஞ்சாயத்து தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் சிலர், 33 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். பெண்களின் உரிமையை தடுக்க வேண்டாம் என்றும், எந்த எதிர்க்கட்சியும் இந்த மசோதாவை எதிர்க்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
கடந்த 25 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சிந்தனை உருவானது. அப்போது அதை செயல்படுத்தியிருக்க வேண்டியது எனவும், தற்போது அது முழுமையான வடிவில் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
பொருளாதார வளர்ச்சி மட்டுமே வளர்ச்சி அல்ல என்றும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா இந்தியாவின் வளர்ச்சிக்கு புதிய பாதையை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த மசோதாவை எதிர்ப்பவர்களை காலம் மன்னிக்காது என்றும், இதற்கு அரசியல் சாயம் அளிக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்திய ஜனநாயகம் ஆயிரம் ஆண்டுகளாக வளர்ச்சி பாதையில் உள்ளது. அந்த வளர்ச்சியில் புதிய பரிமாணத்தை சேர்க்கும் முக்கிய வாய்ப்பு இந்த மசோதா மூலம் கிடைத்துள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
