சென்னை: அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ஜ., பா.ம.க., அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று காலை சென்னை வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தி.மு.க கூட்டணியிலும் தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வி.சி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுக்கு மட்டும் இன்னும் ஒதுக்கீடு நிலுவையில் உள்ளது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜ, பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக இபிஎஸ் உடன் பாஜ மேலிட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த வாரம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இபிஎஸ் சந்தித்து, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து ஆலோசித்திருந்தார்.
இதுவரை ரகசியமாக நடந்த பேச்சுவார்த்தைகளில் ஒவ்வொரு கட்சிக்கும் வழங்கப்படும் தொகுதிகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு பேச்சு தொடங்கப்பட்டது.
இதற்காக மத்திய அமைச்சர் மற்றும் பாஜ தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் சென்னை வந்தார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனுடன் இணைந்து, இபிஎஸ்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களையும் சந்தித்து, தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கூட்டணி கட்சி தலைவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். 9 ஆண்டுகளுக்குப் பிறகு தினகரன் முதன்முறையாக அங்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர், பியூஷ் கோயல், அன்புமணி, தினகரன், நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டை இபிஎஸ் அறிவித்தார்.
அதன்படி, பாஜவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இன்று இரவுக்குள் அனைத்து கட்சிகளுக்குமான தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும் என்றும் இபிஎஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “210 தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெறும். அதிக தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், “நாங்கள் டெல்லி செல்லும் போது திட்டமிட்டு அவதூறு பரப்புவது முதல்வரின் வழக்கம். தோல்வி பயம் காரணமாக அவர் அச்சப்படுகிறார்” என்றும் விமர்சித்தார்.
