டெஹ்ரான்: தனது வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை (டிரோன்) சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனுடன், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவின் எம்க்யூ-1 ரக டிரோன் அதிகாலை நேரத்தில் ஈரான் வான்வெளிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஈரான் வான் பாதுகாப்புப் படை ஏவுகணை தாக்குதல் நடத்தி அந்த டிரோனை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அரசுடன் தொடர்புடைய ‘தஸ்னிம்’ செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் அந்த டிரோன் கண்டறியப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. எனினும், இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்கா தரப்பில் இருந்து உடனடியாக எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
இதற்கு முன்னர், கடந்த 26-ம் தேதி அமெரிக்காவின் எம்க்யூ-9 ரக டிரோனை சுட்டு வீழ்த்தியதாகவும், தனது வான் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் ஒரு போர் விமானத்தின் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் தெரிவித்திருந்தது.
இதற்கிடையில், உலகின் முக்கிய கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கட்டுப்பாடுகளை ஈரான் மேலும் கடுமையாக்கியுள்ளது. அந்த வழியாகச் செல்லும் அனைத்து வணிக மற்றும் போர்க்கப்பல்களும் ஈரான் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக ஈரான் ஆயுதப்படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. அனைத்து கப்பல்களும் நிர்ணயிக்கப்பட்ட கடல் பாதைகளில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும், ஈரான் கடற்படையிடமிருந்து தேவையான அனுமதிகளை பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறும் கப்பல்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
