செய்தி
புதுடெல்லி: ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட வணிக ரீதியிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட் (MDR) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ராகுல் காந்தியை பாஜக விமர்சித்துள்ளது.
நாடாளுமன்ற நிதிக்குழுவில் இடம்பெற்றிருந்த 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் யுபிஐ-க்கான படிநிலை MDR அல்லது வருவாய் கட்டமைப்பை பரிந்துரைத்த குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொண்டபோது எதிர்ப்பு பதிவு செய்யவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ கட்டண முறைக்கு ராகுல் எதிர்ப்பு
ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு புதிய MDR முறை கொண்டுவரப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த MDR நடைமுறை நுகர்வோருக்கு நேரடியாக வரியாக விதிக்கப்படாது என்றும், குறிப்பிட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணமாக இது செயல்படும் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அக்டோபர் 15, 2026 முதல் புதிய கட்டண விதிமுறை அமலுக்கு வர உள்ளது.
நாடாளுமன்ற நிதிக்குழு அறிக்கை
2026 ஆகஸ்ட் 12-ம் தேதி நாடாளுமன்ற நிதிக்குழு ஏற்றுக்கொண்ட அறிக்கையில், யுபிஐ அமைப்பின் நீண்டகால நிதி நிலைத்தன்மைக்காக படிநிலை MDR அல்லது வருவாய் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தக் குழுவில் காங்கிரஸ் எம்.பி.க்களான ப.சிதம்பரம், மனிஷ் திவாரி, கவுரவ் கோகோய், கிஷோரி லால் மற்றும் கே.கோபிநாத் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆகஸ்ட் 12-ம் தேதி அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டபோது இவர்களில் யாரும் எதிர்ப்பையோ, மாறுபட்ட கருத்தையோ பதிவு செய்யவில்லை என அரசு தரப்பு கூறியுள்ளது.
“ராகுல் ஏன் எதிர்க்கிறார்?” – பாஜக கேள்வி
நாடாளுமன்ற குழுவில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இடம்பெற்று, யுபிஐ-க்கான நிலையான வருவாய் கட்டமைப்பை பரிந்துரைத்த நிலையில், தற்போது ராகுல் காந்தி அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற குழுவில் ஆதரித்ததாக கூறப்படும் பரிந்துரைக்கும், தற்போது கட்சி தலைமை முன்வைக்கும் எதிர்ப்புக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக பாஜக விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் தரப்பில் விளக்கம்
இதற்கு காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற நிதிக்குழு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட “யுபிஐ வரி” திட்டத்தை விவாதிக்கவில்லை என்றும், குழு உறுப்பினர்கள் சந்தித்தபோது மத்திய நிதித்துறையிடம் அத்தகைய குறிப்பிட்ட திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், MDR தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டபோது மத்திய அரசு தரப்பில் போதுமான அல்லது திருப்திகரமான பதில்கள் வழங்கப்படவில்லை என்றும் கோகோய் தெரிவித்துள்ளார்.
