ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தீவிர தேடுதல் நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஷோபியான் மாவட்டத்தின் சானாபோரா, சையத்போரா, சையதாபோரா பாலா, அம்ஷிபோரா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து விரிவான தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர்.
தேடுதல் நடவடிக்கையின்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பு அமைப்புகளின் தகவலின்படி, உயிரிழந்தவர்கள் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தைபா அமைப்புடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படுகின்றனர். அவர்களின் அடையாளம் ஜாகிர் அகமது கனி மற்றும் லத்தீப் பட் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதாக பாதுகாப்புப் படையினர் சந்தேகிப்பதால், கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
