நாக்பூர்: இளைஞர்கள் சரியான முறையில் வழிநடத்தப்பட்டால், நாட்டிற்கு மிகப்பெரிய பயன் கிடைக்கும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் மக்கள்தொகையில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார்.
இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைத்தால் அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்க முடியும் என்றும், இல்லையெனில் எதிர்காலத்தில் அவர்கள் சமூகத்திற்கு சுமையாக மாறக்கூடும் என்றும் மோகன் பாகவத் தெரிவித்தார்.
மேலும், இன்றைய இளைஞர்கள் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதியவர்களாக மாறுவார்கள் என்பதால், தங்களது எதிர்காலத்தை மட்டுமின்றி அடுத்த தலைமுறையின் தேவைகளையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
இந்தியாவின் தனித்துவம்
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியா எவ்வாறு வேறுபட்டது என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் மோகன் பாகவத் கூறினார்.
இந்தியாவை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு தேவையான முயற்சிகள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும், அது அனைவரின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.
உலகின் பிற நாடுகள் பெரும்பாலும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவின் பார்வை பணம் சம்பாதிப்பதுடன் மட்டும் நின்றுவிடாது என்றும் கூறினார்.
தடைகளை எதிர்கொள்ள வேண்டும்
இளைஞர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாமல், தங்களது திறன்களை வளர்த்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்று மோகன் பாகவத் அறிவுறுத்தினார்.
வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை தைரியத்துடன் எதிர்கொண்டு, அவற்றை கடந்து வெற்றி பெறுவதற்கான முயற்சியில் இளைஞர்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
