உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில், கடந்த 25 ஆண்டுகளாக போலீசாரிடம் இருந்து தப்பித்துவந்த கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள தகவல்களின் உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆக்ராவின் லோகாமண்டி பகுதியில் கடந்த 2002ஆம் ஆண்டு ஒரு கடையில் புகுந்த மர்ம நபர்கள் ரூ.1.75 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழக்கில் சாமுவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய இரு கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட போதிலும், முக்கிய குற்றவாளியான சாமுவேல் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை கைது செய்ய முடியாத நிலையில், தகவல் தருபவர்களுக்கு ரூ.50,000 பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆக்ரா இணை போலீஸ் கமிஷனர் Ali Abbas தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு குழு, வழக்கை மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது.
போலீசாரிடம் சாமுவேலின் பழைய புகைப்படம் மட்டுமே இருந்ததால், அந்தப் புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு மென்பொருளில் பதிவேற்றினர். வயது முதிர்வால் அவரது முகத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்களை கணித்து, ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் புதிய மாதிரி படங்கள் உருவாக்கப்பட்டன.
பின்னர் அந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் உள்ள கணக்குகளுடன் ஒப்பிடப்பட்டன. அப்போது டில்லியில் வசிக்கும் ஒருவரின் சமூக வலைதள கணக்கு, சாமுவேலின் ஏ.ஐ. உருவாக்கிய முகவடிவத்துடன் ஒத்திருப்பது கண்டறியப்பட்டது.
அவரது டிஜிட்டல் தடயங்களை தொடர்ந்து ஆய்வு செய்த போலீசார், அவரது மனைவியின் பெயரில் போக்குவரத்து விதிமீறல் அபராதம் விதிக்கப்பட்டதற்கான தகவலை கண்டுபிடித்தனர். அந்த பதிவில் இருந்த முகவரியை அடிப்படையாகக் கொண்டு ரகசிய கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், சாமுவேல் தனது பெயரையும் அடையாளத்தையும் மாற்றி வாழ்ந்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 1ஆம் தேதி போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
இதன்மூலம், 25 ஆண்டுகளாக நீடித்த தேடுதல் நடவடிக்கைக்கு முடிவு கிடைத்ததுடன், குற்றவாளிகளை கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பங்கு மீண்டும் வெளிப்பட்டுள்ளது.
