பிரதமர் Narendra Modi கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் நாட்டிற்கும் மக்களுக்கும் சேவையாற்றி வருகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் Amit Shah தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நாளை நினைவுகூர்ந்த அமித் ஷா, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கடந்த 12 ஆண்டுகளில் ஏழைகள் நலன் மற்றும் நாட்டின் வளர்ச்சி ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 80 கோடி மக்களுக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்குதல், நாடு முழுவதும் 90-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை உருவாக்குதல், 140-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்துதல், 4 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், 1.45 லட்சம் கிலோமீட்டர் சாலைகள், 3,000 கிலோமீட்டர் விரைவுச் சாலைகள் அமைத்தல், 50 கோடி மக்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டு வசதி வழங்குதல் மற்றும் 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்தியாவை உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாற்றுவதில் பிரதமர் மோடி முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும், அவரது அர்ப்பணிப்பும் தலைமையும் இந்த மாற்றங்களுக்கு அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் S. Jaishankar தனது பதிவில், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் வெளியுறவுத்துறை செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன், இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட நெருக்கடிகளின் போது இந்திய குடிமக்களுக்கு உதவுவதில் வெளியுறவுத்துறை திறம்பட செயல்பட்டதாகவும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 44 புதிய தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உலக அரங்கில் பரப்புவதற்கான முயற்சிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இந்தியர்களின் சர்வதேச மதிப்பும் தன்னம்பிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
