டெஹ்ரான்: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகின் முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் செல்லும் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்களுக்கு இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் பாதுகாப்பு வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரபிக்கடலில் அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணை உலகளவில் மிகவும் முக்கியமான கடல் பாதைகளில் ஒன்றாகும். இந்த ஜலசந்தி பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவை இணைக்கும் முக்கிய கடல் வழியாக உள்ளது.
ஈரான் நாட்டின் கடல் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த பாதை வழியாகவே ஆசிய நாடுகளுக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் பெரும்பகுதி கொண்டு செல்லப்படுகிறது. உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
ஹோர்முஸ் நீரிணை
இந்நிலையில் ஈரான்–இஸ்ரேல் போர் காரணமாக இந்த பாதையில் பதற்றம் உருவாகி சரக்கு கப்பல் போக்குவரத்தில் தற்காலிக தடைகள் ஏற்பட்டன. குறிப்பாக அமெரிக்காவுடனான மோதல் சூழ்நிலை காரணமாக ஈரான் ராணுவம் இந்த பகுதியில் பாதுகாப்பு கண்காணிப்பை அதிகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் தாக்கமாக இந்தியாவிற்கு வரும் சமையல் எரிவாயு விநியோகத்திலும் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையை சமாளிக்க இந்திய பிரதமர் மோடி ஈரான் அதிபருடன் சமீபத்தில் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னர் இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஷிவாலிக் மற்றும் நந்தாதேவி ஆகிய இரண்டு இந்திய எல்பிஜி கப்பல்கள் சுமார் ஒரு லட்சம் டன் சமையல் எரிவாயுவை ஏற்றிச் கொண்டு ஹோர்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கப்பல்கள் விரைவில் குஜராத் மாநில துறைமுகங்களை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கடற்படை பாதுகாப்பு
மேலும் பாரசீக வளைகுடா பகுதியில் தற்போது சுமார் 22 இந்திய எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து செல்ல இந்திய அரசு மற்றும் கடற்படை ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
இதுகுறித்து இந்திய கடற்படை வட்டாரங்கள் கூறுகையில், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் இந்திய கப்பல்களுக்கு இந்திய கடற்படையின் போர்க் கப்பல்கள் பாதுகாப்பு வழங்கி வருவதாக தெரிவித்தன.
பெர்ஷியன் வளைகுடா பகுதியில் கடந்த மார்ச் 14ஆம் தேதி இரண்டு இந்திய கப்பல்கள் அந்த பாதையை கடந்து சென்றபோது அவற்றுக்கு இந்திய போர்க் கப்பல்கள் பாதுகாப்பு வழங்கியதாகவும் கூறப்பட்டது.
மேலும் பெர்ஷியன் வளைகுடா பகுதியில் தற்போது மூன்று இந்திய போர்க் கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தேவைக்கு ஏற்ப அவை பயன்படுத்தப்படும் என்றும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் இஸ்ரேல் பதற்றம்
இதற்கிடையில் மேற்கு ஆசியாவில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின.
அதற்கு பதிலடி நடவடிக்கையாக ஈரானும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக இரு தரப்பும் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் விமானப்படை
இஸ்ரேல் விமானப்படை வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதில் பாலிஸ்டிக் ஏவுகணை தளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆயுத உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட முக்கிய ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு மட்டுமல்லாது உலகம் முழுவதும் பதற்றம் நீடித்து வருகிறது.
