புதுடில்லி: “கொரோனா தொற்றின் போது அமல்படுத்தப்பட்டது போல நாடு தழுவிய ஊரடங்கு விதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை” என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக அந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிலைகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுதவிர, உலகளவில் 20 சதவீத எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் அரசு தடை விதித்தது. இதனால் உலகளவில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக, கொரோனா காலத்தில் போல நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்கும் என தகவல் பரவியது. இது வெறும் வதந்தி என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்ட அறிக்கையில், “நம் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பரவும் தகவல் முற்றிலும் வதந்தி; பொய்யானவை. மத்திய அரசின் பரிசீலனையில் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை” என கூறப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய சூழலில் மக்கள் அமைதியாகவும் பொறுப்புணர்வுடனும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி மற்றும் எரிபொருள் வினியோகம் தடையின்றி தொடர்வதை உறுதிசெய்ய மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதால், நாட்டின் எரிசக்தி நிலைமை பாதுகாப்பாக உள்ளது என்றும், எழக்கூடிய சவால்களை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட ‘லாக்டவுன்’ அமல்படுத்த வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
