புதுடில்லி: நாடு முழுவதும் ரேஷன் பொருட்கள் விநியோக முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் ‘சார்தக் பி.டி.எஸ்’ திட்டத்திற்கு Union Cabinet of India ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக ரூ.25,630 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் Narendra Modi தலைமையில் டில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 16வது நிதிக்குழுவின் காலப்பகுதிக்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் Ashwini Vaishnaw கூறுகையில், தற்போதைய ரேஷன் விநியோக முறையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், ஆனால் போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் பொருட்கள் கையாளும் முறை நவீனப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த திட்டம் மூன்று முக்கிய தூண்களின் அடிப்படையில் செயல்படும் என்று அவர் கூறினார்.
முதலாவது ‘நிர்மல்’ திட்டம். இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிகழ்நேர ரேஷன் பயனாளர்கள் பதிவேட்டை பராமரிக்கும். மத்திய துறைகளுடன் நேரடி இணைப்பு மூலம் தகுதியானவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும்.
இரண்டாவது ‘ஆஷா’ திட்டம். இது பன்மொழி ஆதரவுடன் இயங்கும் ஏஐ அடிப்படையிலான மக்கள் குறைதீர்ப்பு மற்றும் தொடர்பு தளமாக இருக்கும். வாட்ஸ்அப் மற்றும் சாட்பாட் சேவைகளுடன் இணைக்கப்பட்ட இந்த அமைப்பு தினசரி மூன்று லட்சம் புகார்கள் மற்றும் கருத்துகளை கையாளும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது ‘சாக்ஷம்’ திட்டம். இது ரேஷன் பொருட்கள் போக்குவரத்து மற்றும் விநியோக நிர்வாகத்தை கண்காணிக்கும் ஏஐ தளமாக செயல்படும். வாகன கண்காணிப்பு, க்யூஆர் கோடு கண்காணிப்பு மற்றும் உணவு தானிய தேவையை முன்கூட்டியே கணிக்கும் வசதிகள் இதில் இடம்பெறும்.
மேலும், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், கணினி மொழி செயலாக்கம் மற்றும் பிளாக்செயின் போன்ற உயர் தொழில்நுட்பங்கள் இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனடையும் 81.35 கோடி மக்களின் உணவு பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
