வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தி பகுதி அமெரிக்க கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஈரான் அணு ஆயுதங்களை பெற அனுமதிக்க மாட்டோம் என்றும் அமெரிக்க அதிபர் Donald Trump தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “எங்கள் படைகள் மேற்கொண்ட முற்றுகை நடவடிக்கையின் மூலம் ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக எங்களது கட்டுப்பாட்டில் உள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை பெறாது” என்று கூறினார்.
மேலும், ஈரான் அணு ஆயுதங்களை பெற முயன்றால் அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார். கடந்த ஆண்டு அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பிறகும், நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்ட அணுப் பொருட்களை ஈரான் வைத்திருப்பதை அமெரிக்கா ஏற்காது என்றும் தெரிவித்தார்.
“அந்த அணுப் பொருட்களை நாங்கள் கைப்பற்றுவோம். அவற்றை அழிக்கவும் தயங்க மாட்டோம். ஆனால் அவை ஈரானின் கட்டுப்பாட்டில் தொடர அனுமதிக்க மாட்டோம்” என்றும் டிரம்ப் கூறினார்.
அதே நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காக திறந்த நிலையில் இருக்க வேண்டும் என்றும், எந்த தடையும் இல்லாமல் கப்பல்கள் இயங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“அது ஒரு சர்வதேச நீர்வழிப்பாதை. அங்கு சுங்கக் கட்டணங்கள் இல்லாமல் தடையற்ற கப்பல் போக்குவரத்து நடைபெற வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம்” என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
