தூத்துக்குடி: தமிழக வெற்றிக்கழக (தவெக) அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 16 நாட்களாக முதல்வர் விஜய் அனைத்து துறைகளின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருவதாகக் கூறினார். தினமும் சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரை பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழக அமைச்சரவை கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.
கடந்த 55 நாட்களாக அரசின் செயல்பாடுகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும், அனைத்து துறைகளிலும் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் ஆதரவு அளித்து வரும் நிலையில், அனைவரும் இந்த அரசின் முயற்சிகளை வரவேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
