மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் அரசியல் பரபரப்பு நீடித்து வரும் நிலையில், கொல்கட்டா மேயர் Firhad Hakim தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அதிருப்தி மற்றும் குழப்பம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், Mamata Banerjee தலைமையில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 60 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிடாபிரடா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜியின் எதிர்ப்பை மீறி ரிடாபிரடா பானர்ஜி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டது, திரிணமுல் காங்கிரஸ் தலைமையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், மம்தா பானர்ஜியின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்படும் பிர்ஹத் ஹக்கிம், கொல்கட்டா மேயர் பதவியில் இருந்து விலகியுள்ளார். 2018ஆம் ஆண்டு முதல் அவர் மேயராக பணியாற்றி வந்ததுடன், மம்தா அரசில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, மேயர் பதவியில் இருந்து விலக அனுமதி கோரி மம்தா பானர்ஜியிடம் அவர் பலமுறை கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இறுதியில், மம்தா அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து தனது ராஜினாமாவை அவர் சமர்ப்பித்துள்ளார்.
பிர்ஹத் ஹக்கிம் ராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய கொல்கட்டா மேயராக யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
