உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், ஹிந்து சமூகத்தில் எந்தவிதமான பாகுபாடும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
சமுதாயத்தை நாம் ஒரே குடும்பமாகவே பார்க்க வேண்டும் என்றும், முழு ஹிந்து சமூகமும் ஒன்றே என்ற நம்பிக்கையில்தான் ஆர்.எஸ்.எஸ். செயல்படுகிறது என்றும் அவர் கூறினார். மொழி, ஜாதி, பிரிவு, சமூக நிலை போன்ற பல்வேறு வேறுபாடுகளை உலகம் முன்வைத்தாலும், அவை மனிதர்களை பிரிக்கக் கூடாது என்றார்.
உலகம் அங்கீகரிக்கும் அனைத்து வகையான ஹிந்துக்களிடமும் தன்னிடம் நட்புறவு இருப்பதாக கூறிய அவர், அனைவரையும் நண்பர்களாகவே நடத்துகிறோம் என்றும், ஒன்றாக உணவருந்தி, இன்பம்–துன்பங்களில் துணையாக நிற்கிறோம் என்றும் தெரிவித்தார்.
ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் சமூக நல்லிணக்கம் தான் ஹிந்து சமூகத்தின் அடையாளம் என்றும், அந்த ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
