புதுடில்லி: ரபேல் போர் விமானங்கள் இந்தியாவை வலிமையானதாக மாற்றும். இந்த ஒப்பந்தம் மீது ஏன் விமர்சனங்கள் எழுகின்றன என்பது புரியவில்லை என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: ரபேல் விமானங்களின் உதிரிபாகங்கள் தொடர்பாக, அவற்றை தயாரிக்கும் Dassault Aviation நிறுவனத்துக்கும் இந்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இந்த விமானங்கள் இந்தியாவின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளின் உறவையும் மேலும் வலுப்படுத்தும். அதோடு, இந்தியாவில் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். இருப்பினும், இந்த ஒப்பந்தம் மீது ஏன் விமர்சனங்கள் எழுகின்றன என்பது புரியவில்லை.
இந்தியா–பிரான்ஸ் ஒத்துழைப்பு சாதாரணமானது அல்ல; அது தனித்துவமானது. இந்த கூட்டாண்மையை மேலும் முன்னேற்றி கொண்டு செல்கிறோம். இதில் ரபேல் விமானங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அதிக அளவில் இந்திய உதிரிபாகங்கள் இடம்பெறுவதையும், முக்கிய சாதனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதையும் உறுதி செய்துள்ளோம். Tata Airbus ஒப்பந்தத்தில் இருப்பது போலவே, ரபேல் திட்டத்திலும் அந்த ஒத்துழைப்பு தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Dassault Aviation நிறுவனத்திடமிருந்து 114 போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
