புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்திற்கு உள்ளான நீதித்துறையில் ஊழல் குறித்த பாடத்தை எழுதியவர்களும், அந்தப் புத்தகத்தை தயாரித்தவர்களும் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த ‘நீதித்துறையில் ஊழல்’ என்ற பாடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து என்சிஇஆர்டி மன்னிப்பு கோரி, அந்தப் பாடத்தை நீக்கியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், நீதித்துறைக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், நீதிமன்றம் எதை கூறினாலும் அதனை ஏற்றுக்கொள்வோம் என்றும் தெரிவித்தார். பாடப்புத்தக விவகாரம் கவலை அளிப்பதாகவும், இதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார். இந்த பிரச்சினை தனது கவனத்திற்கு வந்ததும், உரிய நடவடிக்கை எடுத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உத்தரவிட்டதாக தெரிவித்தார்.
நீதித்துறையை அவமதிக்கும் நோக்கம் எதுவும் இல்லை என்றும், அரசுக்கும் அத்தகைய எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார். இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விசாரணை நடைபெற்று வருவதாகவும், புத்தகத்தை தயாரித்தவர்களும் பாடத்தை எழுதியவர்களும் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வோம் என்றும் தெரிவித்தார்.
நீதித்துறையின் மீது நம்பிக்கை உள்ளதாகவும், இந்தியா போன்ற நாட்டில் நீதித்துறை உயர்ந்த மற்றும் மரியாதைக்குரிய இடத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அதன் உத்தரவுகளை மதித்து செயல்படுவது அரசியலமைப்புச் மற்றும் தார்மிகக் கடமை எனவும், நீதித்துறையின் உத்தரவுகளை ஏற்று கீழ்படிவதில் அரசு உறுதியுடன் இருப்பதாக 140 கோடி மக்களுக்கும் தெரிவித்தார்.
