புதுடில்லி: டில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின்போது போலீசார் அதிகப்படியான படைகளை பயன்படுத்தி வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி தலைமையில் விசாரணைக் குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின்போது மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு கடந்த விசாரணைக்கு வந்தபோது, ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது மாணவர்களை கட்டுப்படுத்த போலீசார் அதிகப்படியான படைகளை பயன்படுத்தியதாகவும், வன்முறை நடைபெற்றதாகவும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனிக் குழு அமைக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரவி சங்கர் ஜா, டில்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஷலிந்தர் கவுர், சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ரிஷி குமார் சுக்லா மற்றும் மேகாலயா மாநில முன்னாள் டி.ஜி.பி. பிஷ்னோய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
என்னென்ன குறித்து விசாரணை?
ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது போலீசார் பயன்படுத்திய பெல்லட் குண்டுகள், தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளின் பயன்பாடு குறித்து குழு விசாரிக்கும்.
மேலும், பெண் போராட்டக்காரர்களுக்கு எதிரானதாக கூறப்படும் வன்முறை, போலீஸ் கண்காணிப்பு, கூட்டத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவையும் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ உதவி மற்றும் இழப்பீடு தொடர்பான நடவடிக்கைகளையும் குழு ஆய்வு செய்யும்.
அதேநேரத்தில், போராட்டத்தின்போது போலீசார் மீது வன்முறை நிகழ்ந்ததாகவும், பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் விசாரணைக் குழு பரிசீலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
