கோவை: எல்.பி.ஜி.க்கு மாற்றாக, மெத்தனாலில் இருந்து டைமெத்தில் ஈதர் (டி.எம்.இ.) தயாரிக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், காஸ் தட்டுப்பாடு போன்ற சூழல்களில் இந்த மாற்று எரிபொருளை பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்.பி.ஜி. சமையல் எரிவாயுவாகவும், வாகன எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது; இது ஒரு ஹைட்ரோகார்பன் என்பதால், நிலத்தடியில் இருந்து எடுப்பதற்கு எதிர்ப்பு நிலவுகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது அதிக அளவு அன்னிய செலாவணி செலவாகிறது.
இதற்கு மாற்றாக, மெத்தனாலில் இருந்து டைமெத்தில் ஈதரை தயாரிக்கும் தொழில்நுட்பம் தற்போது கிடைக்கிறது.
புனே தேசிய வேதியியல் ஆய்வக விஞ்ஞானிகள் கூறியதாவது: வேளாண் விளைபொருட்களில் இருந்து மெத்தனால் தயாரிக்கப்படுகிறது; அதிலிருந்து டி.எம்.இ. உருவாக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த டைமெத்தில் ஈதர், எல்.பி.ஜி.யை விட தூய்மையான எரிபொருளாகும். இந்திய தர நிர்ணயத்தின்படி, எல்.பி.ஜி.யுடன் 20 சதவீதம் வரை டி.எம்.இ. கலந்து பயன்படுத்தலாம்.
மேலும், இதற்கு தற்போது பயன்பாட்டில் உள்ள எல்.பி.ஜி. சிலிண்டர் மற்றும் பர்னர் போதுமானதாகும்.
அதே நேரத்தில், 100 சதவீத டி.எம்.இ.யையும் தனியாக எரிபொருளாக பயன்படுத்த முடியும்; இது சமையல் காஸ், வாகன எரிபொருள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்த ஏற்றதாகும் என அவர்கள் தெரிவித்தனர்.
