திருவனந்தபுரம்: சபரிமலையில் நடைபெற்ற தங்கம் கொள்ளை வழக்கில், சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையில் கேரள முதல்வர் அலுவலகத்தின் தலையீடு இருப்பதாக குற்றஞ்சாட்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கேரள சட்டசபையில் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில்-இல், 2019ம் ஆண்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, கருவறை முன்பிருந்த துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள் புதுப்பிக்கப்பட்டன.
இந்த பணிகளின் போது, துவார பாலகர் சிலைகளின் தங்க கவசத்தில் இருந்து நான்கு கிலோ தங்கம் மாயமானது. அதேபோல், கருவறை கதவுகளில் இருந்த தங்கமும் திருடப்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சபரிமலை சிறப்பு கமிஷனர், கடந்த ஆண்டு செப்டம்பரில் தாக்கல் செய்த அறிக்கையின் மூலம் தங்கம் கொள்ளை போனது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, எஸ்.ஐ.டி. எனப்படும் சிறப்பு விசாரணை குழுவை நியமித்தது. திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முன்னாள் அதிகாரிகள் உட்பட 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை காலக்கெடு முடிந்த நிலையில், கைது செய்யப்பட்ட சிலர் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். இதனால், விசாரணை திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், கேரள சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்றைய சபை நடவடிக்கையின் போது எதிர்க்கட்சி தலைவர் பேசியதாவது:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் காணாமல் போன வழக்கு விசாரணையில், முதல்வர் அலுவலகம் தலையிடுகிறது. எஸ்.ஐ.டி. விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஜாமின் பெற்று வெளியே வர ஏதுவான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. முக்கிய குற்றவாளியான உன்னி கிருஷ்ணன் போத்தியும் விரைவில் வெளியே வந்துவிடுவார். இதற்கு முதல்வர் அலுவலகத்தின் அழுத்தமே காரணம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு ஆளும் இடது ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கூச்சலிட்டு, சதீசனை பேசவிடாமல் செய்தனர்.
இதற்கு பதிலாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபை நடுவில் திரண்டு, அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘காங்கிரசுக்கும் தொடர்பு’
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் தொடர்பு இருப்பதாக, பா.ஜ. இளைஞர் அணியினர் குற்றஞ்சாட்டினர். இதனை கண்டித்து, அவர்கள் சட்டசபை நோக்கி நேற்று பேரணி சென்றனர்.
சட்டசபை வளாகத்துக்கு வெளியே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தடையை மீற முயன்றதால், போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.
