சென்னை: மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5% இடஒதுக்கீடு குறித்து சட்டசபையில் கடும் விவாதம் எழுந்தது. அமைச்சர் மா. சுப்பிரமணியன், எதிர்க்கட்சியாக இருந்த திமுக கவர்னர் மாளிகை முன் நடத்திய போராட்டத்தின் விளைவாகவே 7.5% இடஒதுக்கீடு சட்டமாகியது என தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இபிஎஸ், 7.5% இடஒதுக்கீட்டை திமுக வலியுறுத்தியது என்ற கருத்து தவறானது; உண்மைக்கு புறம்பான தகவல்கள் கூறப்படுகின்றன என்றார். தொடர்ந்து பேசிய கே.பி. முனுசாமி, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேரும் வகையில் 7.5% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது அதிமுக ஆட்சி என வலியுறுத்தினார்.
அமைச்சரின் கருத்தை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையில் பரபரப்பு நிலவியது. விவாதம் தீவிரமடைந்த நிலையில், உறுப்பினர்கள் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது.
இதற்கிடையே, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் இபிஎஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அதிமுக ஆட்சியில் ஒற்றை இலக்க வளர்ச்சி மட்டுமே இருந்ததாகவும், தற்போதைய ஆட்சியில் இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த இபிஎஸ், திமுக ஆட்சியிலேயே உற்பத்தி அதிகரித்ததாக கூறுவது தவறு என்றார். தங்கள் ஆட்சிக் கால சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்தோம்; விளம்பரம் செய்யவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், 11.19% வளர்ச்சி என்பது திமுக – அதிமுக ஆட்சிக் காலங்களை இணைத்துக் கணக்கிடப்பட்டதன் விளைவு என்றார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இடம்பெற்ற இந்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.
