புவனேஸ்வர்: “தமிழகத்தில் பெரும்பான்மையான ஹிந்துக்கள் ஆன்மிகவாதிகளாக இருக்கும்போது, கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட தி.மு.க., எப்படி வெற்றி பெறுகிறது என்பது புரியவில்லை,” என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
ஒடிஷா மாநிலம், புவனேஸ்வர் விமான நிலையத்தில் தமிழ் ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தை போலவே ஒடிஷா மாநிலமும் உள்கட்டமைப்பில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. புதிய கட்சியாக த.வெ.க. போட்டியிடுவதால் யாருக்கு அதிக பாதிப்பு இருக்கும் என விவாதிக்கின்றனர். எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்படி தி.மு.க.வுக்கே த.வெ.க.வால் அதிக பாதிப்பு இருக்கும்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமையும். அதற்கான அரசியல் சூழல் உருவாகியுள்ளது. நான் தமிழகத்திற்கு அடிக்கடி வருவேன். ஆன்மிக பயணமாகவும் வந்துள்ளேன். ராமேஸ்வரத்தில் ராமர் கோவில், மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களுக்கு சென்றுள்ளேன்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும்பான்மையான ஹிந்து மக்களை ஆன்மிகவாதிகளாக பார்க்க முடிகிறது. இவ்வாறு ஆன்மிகவாதிகள் நிரம்பியுள்ள தமிழகத்தில் நாத்திகத்தை முன்னிலைப்படுத்தும் தி.மு.க. எப்படி வெற்றி பெறுகிறது என புரியவில்லை. இதற்கு தமிழக மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும். வரும் சட்டசபைத் தேர்தல் வாயிலாக அதற்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.
