மும்பை: மறைந்த அஜித் பவார் மனைவியும், ராஜ்யசபா உறுப்பினருமான சுனேத்ரா பவார், மஹாராஷ்டிராவின் துணை முதல்வராக இன்று (ஜனவரி 31) பதவியேற்றார்.
கடந்த ஜனவரி 28 அன்று பாராமதியில் நடைபெற்ற விமான விபத்தில் துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட இடைவெளியை நிரப்பவும், அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், துணை முதல்வர் பதவியை அவரது மனைவியால் நிரப்ப கட்சியினர் முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக சுனேத்ரா பவார் தேர்வு செய்யப்பட்டார். மும்பை விதான் பவனில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில், மூத்த தலைவர் திலீப் வால்சே பாட்டீல் அவரது பெயரை முன்மொழிய, சகன் புஜ்பால் அதனை வழிமொழிந்தார். இந்த முடிவுக்கு பாஜ மற்றும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) உள்ளிட்ட மஹாயுதி கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
இதையடுத்து, சுனேத்ரா பவார் மஹாராஷ்டிராவின் துணை முதல்வராக இன்று (ஜனவரி 31) மாலை 5 மணிக்கு பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சுனேத்ரா பவார், அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். துணை முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டுமெனில், அடுத்த ஆறு மாதங்களுக்குள் மஹாராஷ்டிர மாநில சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ அல்லது எம்எல்சி) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி வாழ்த்து
மஹாராஷ்டிராவின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள சுனேத்ரா பவாருக்கு வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த அஜித் பவாரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றவும், மாநில மக்களின் நலனுக்காகவும் அவர் அயராது உழைப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இலாகா ஒதுக்கீடு:
மஹாராஷ்டிராவின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள சுனேத்ரா பவாருக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாநில கலால் வரி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், சிறுபான்மையினர் நலன் மற்றும் அவ்காப் துறைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக மறைந்த அஜித் பவார் வசம் இருந்த மிக முக்கியமான திட்டம் மற்றும் நிதித் துறைகள், தற்போது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.
