சென்னை: சிறுபான்மையினர் மீது நடைபெறும் தாக்குதல்கள், நல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் விரும்பும் எந்த நாட்டுமக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மையினர் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்குவது தான் பெரும்பான்மையினரின் உண்மையான வலிமையையும் பண்பையும் வெளிப்படுத்தும் எனக் கூறியுள்ளார். ஆனால், பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் குழுக்கள் தாக்குதல்கள் மற்றும் கலவரங்களில் ஈடுபடுவது, குறிப்பாக பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றிருந்த நேரத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுவது, நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செய்தியாகவே பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மணிப்பூர் கலவரங்களுக்கு பிறகும், ஜபல்பூர், ராய்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வது கவலை அளிப்பதாகவும், இதுபோன்ற செயல்களை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய பாஜ அரசு பொறுப்பேற்ற பின்னர் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலத்தில் உருவாகக்கூடிய ஆபத்துகளை உணர்த்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நாட்டின் ஒற்றுமையை பாதித்து, மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயலும் கலவரக் குழுக்களை கட்டுப்படுத்துவது அனைவரின் பொறுப்பும் கடமையும் ஆகும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
