சென்னை: கவர்னர் ரவி பற்றி கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ளதாக, சபாநாயகருக்கு பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சபாநாயகர் அப்பாவு, திமுக அரசின் கீழ் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தீவிரவாதி என்று அழைக்கும் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளார்.2022ம் ஆண்டு கோவையில் நடந்த கொடூரமான தற்கொலைக் குண்டுவெடிப்பை அப்பாவு மறந்துவிட்டாரா?
பாஜ அலுவலகங்கள் மற்றும் பாஜ நிர்வாகிகளின் நிறுவனங்கள் மீது பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா குண்டர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதை அவர் மறந்துவிட்டாரா? கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் ஆழமாக வேரூன்றிய தீவிரவாத அமைப்புகளின் மீதான ஒடுக்குமுறை குறித்து தேசிய புலனாய்வு முகமை வெளியிட்ட செய்திகளை அவர் எப்போதாவது பார்த்தாரா?
எல்லாவற்றிற்கும் மேலாக, பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய அரசு தவறியதால் தமிழக மக்கள் தொடர்ந்து துன்பப்படுகின்றனர். இந்த சூழலில், 1998ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பாஷாவுக்கு, இறுதி ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தியாகி போன்ற பிரியாவிடை அளிக்கப்பட்டது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
