சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, குற்றவாளிகள் பயமின்றி செயல்படும் நிலை உருவாகியுள்ளது என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: 14 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி மற்றும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளதற்கான கொடூரமான சாட்சியாக உள்ளது.
14 வயது சிறுமி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை நடைபெறும் அளவிற்கு தமிழகம் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறியிருப்பது மிகப்பெரிய அவமானம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் கீழ் செயல்படும் சிலர் நடத்தும் சாராய ஆலைகளின் வருமானத்திற்காக, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பெண்களும் சிறுமிகளும் பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.
தொடர்ச்சியாக நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், சமூக விரோதிகளுக்கு காவல்துறையோ அல்லது திமுக அரசோ மீது எந்த பயமும் இல்லையென்பதை காட்டுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, குற்றவாளிகள் பயமின்றி திரியும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் நூறு ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
நமது குழந்தைகள் பாதுகாப்பின்றி இருக்கும் நிலையில் கூட முதல்வர் விளம்பரங்களில் ஈடுபட்டு வருகிறார் என்றும் அவர் கூறினார்.
சட்டம் ஒழுங்கை சரியாக கையாள முடியவில்லை என்றால் முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
