உள்நாட்டு கலவரத்துக்கு அமெரிக்கா, இஸ்ரேல் தான் காரணம்: ஈரான் தலைவர் கமேனி குற்றச்சாட்டு
தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தான் ஈரானில் போராட்டங்களை தூண்டி விடுவதாக, ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி குற்றம்சாட்டியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மேற்காசிய நாடான ஈரான்-இல், விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 28ஆம் தேதி முதல், முக்கிய நகரங்களில் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். போராட்டத்தின் போது அரசுக்கு எதிரான முழக்கங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.
ஈரான் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டால், அமெரிக்கா வேடிக்கை பார்க்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். தங்களின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை ஈரான் விரும்பவில்லை என, ஈரான் அதிபர் மசூத் டிரம்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், டிரம்பின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என அயத்துல்லா அலி கமேனி அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம், போராட்டக்காரர்களுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பாதுகாப்புப் படைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் உரையாற்றிய கமேனி, “நாங்கள் போராட்டக்காரர்களிடம் பேச உள்ளோம். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஆனால், அதில் எந்தப் பலனும் இல்லை. போராட்டக்காரர்கள் அடக்கி ஒடுக்கப்பட வேண்டும். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தான் ஈரானில் போராட்டங்களை தூண்டி விடுகின்றன. ஈரானின் ரியால் நாணயத்தின் மதிப்பு சரிந்ததற்கும் நமது எதிரி நாடுகளே காரணம்,” என்றார்.
மேலும், “எதிரி நாடுகளுக்கு ஆதரவாக செயல்படும் சில நபர்கள், வர்த்தகர்களை முன்னிலைப்படுத்தி, முஸ்லிம் மதத்திற்கும் ஈரானுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்,” என்றும் கமேனி தெரிவித்துள்ளார்.
