மாஸ்கோ: ரஷ்யா தொடர்ந்து ஈரானுக்கு ஆதரவாக இருக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் தெரிவித்தார். மேலும், ஈரானின் புதிய ஆட்சியாளராக தேர்வு செய்யப்பட்ட மொஜ்தபா கமேனிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
ஈரான் நாட்டின் மறைந்த ஆட்சியாளரின் மகனான மொஜ்தபா கமேனி, இஸ்லாமியக் குடியரசின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ரஷ்யா எப்போதும் ஈரானுக்கு துணை நிற்கும். ஈரானுக்கு ஆதரவையும், அந்த நாட்டின் நண்பர்களுடன் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
மொஜ்தபா கமேனி தனது தந்தையின் பணியை மரியாதையுடன் தொடர்ந்து மேற்கொள்வார். கடினமான சூழ்நிலைகளில் ஈரான் மக்களை ஒன்றிணைப்பார் என்று நான் நம்புகிறேன்.
ஈரான் ஆயுதத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் சூழலில், இந்த உயர்ந்த பதவியில் இருக்கும் தலைவருக்கு தைரியமும் அர்ப்பணிப்பும் அவசியம் என்று புடின் கூறினார்.
இதற்கு முன்பு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசிய புடின், ஈரான் முன்னாள் ஆட்சியாளர் அயதுல்லா அலி கமேனி, அவரது குடும்ப உறுப்பினர்கள், அரசியல் மற்றும் ராணுவ தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உயிரிழந்ததற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தார்.
