கும்பகோணம்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குறித்து கடுமையான விமர்சனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார். கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் பேசிய அவர், “இபிஎஸ்க்கு தெரிந்த அரசியல் என்றால் காலில் விழுவதும், பின்னால் காலை வாரிவிடுவதும் தான்” என விமர்சித்தார்.
தமிழகம் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான மாநிலமாக இருப்பதற்கு திமுக தான் காவல் அரணாக செயல்படுகிறது என்று குறிப்பிட்ட முதல்வர், இதனால் கும்பல் வன்முறை போன்ற சம்பவங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்தார். இந்த அமைதியான சூழல் சிலருக்கு பொறாமையை ஏற்படுத்தி இருப்பதாகவும், அதனால் அவர்கள் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகளை பயன்படுத்தி அச்சுறுத்தி கூட்டணிகளை உருவாக்குவதாகவும் குற்றம் சாட்டினார்.
அதிமுக தலைமையிலான அரசியல் பயணம் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதாக கூறிய முதல்வர், இபிஎஸின் துரோகம் சீனப் பெருஞ்சுவரை விட நீளமானது என விமர்சனம் செய்தார். குடியுரிமை சட்டத்திற்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக அதற்கு ஆதரவளித்ததால் அது சட்டமானதாக அவர் குறிப்பிட்டார்.
ஆட்சிக்கு வந்ததும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதாக கூறிய முதல்வர், பாஜ கூட்டணி ஆட்சி அமைந்தால் வளர்ச்சியடைந்த தமிழகம் பாதிக்கப்படும் என எச்சரித்தார். அந்த ஆபத்தை தடுக்க திமுக கூட்டணிக்கே துணிச்சல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
